Thursday, January 29, 2009

uphill task என்பது இதுதானா?

நாங்கள் எப்படி இந்த மலைக்கு வந்தோம்? கீழே வெறும் பள்ளத்தாக்காக இருக்கிறதே? யாராவது ஹெலிகாப்டரில் அங்கோ கொண்டுபோய் இறக்கிவிட்டார்களா?

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்!)

இடம்: செம்பரா மலையுச்சிக்கு(2100 மீ) இட்டுச்செல்லும் பாதை, வயநாடு, கேரளா.
காலம்: ஆகஸ்ட்,2005

இல்லை. மலேயேறிதான் வந்தோம். கீழே நாங்கள் வந்த மலைகள் இருக்கின்றன. அனைத்தும் திரண்டு இருக்கும் மேகத்தால மூடப்பட்டுள்ளன. அது ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம். பாறையில் ஆணியடித்து அதில் கயிறு தொங்கவிட்டு ஏறவில்லையே தவிர பிற அனைத்து நுட்பங்களும் தேவைப்பட்டன. பல இடங்களில், பெரிதாக வளர்ந்திருக்கும் யானைப்புற்களைப் பற்றிக்கொண்டுதான் balance செய்ய முடிந்தது. படத்தில் உள்ள எமது குழுவினர் எங்களை வந்தடைவதற்காக காத்திருக்கிறோம். அவ்வப்போது பருவமழையின் சாரல்கள் வந்து நனைத்தபடி இருந்தன. இங்கே ஒரு ‘டீ’ கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்! என்ன செய்ய? பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாயிற்றே? இயற்கை எழிலை வேண்டுமட்டும் பருகினோம் :-)

பரங்கித்துரையின் சிலை

மும்பையில் உள்ள ஒரு பூங்கா(கஸ்தூர்பா பாங்-என்று நினைக்கிறேன்)வில் இந்த அற்புதமான சிலை உள்ளது. வெள்ளைக்கார துரை(? இல்லை ஏதேனும் மராட்டிய வீரரா?) மிடுக்காக குதிரை மீது அமர்ந்துள்ளார்.



(படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது சொடுக்கவும்!)

சிலை மிகவும் உயிரோட்டத்துடன் இருக்கிறதல்லவா? சிலையை வடித்தவன் யாரோ தெரியவில்லை!. இது உலோகச் சிலையா? அல்லது கற்சிலையா?

எந்த பிற்தயாரிப்பும் (post production) செய்யவில்லை. புகைப்படத்தின் கம்போசிஸன் நன்றாகவே வந்திருக்கிறது அல்லவா? வலது பக்கம் சிலையை அடுத்துள்ள இடைவெளி இடது பக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர! இனி நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்கள் கண்களுக்கும் கருத்துகளுக்கும் விட்டுவிட்டு விடை பெறுகிறேன்.

தாஜ் ஹோட்டல்

26/11 தாக்குதலுக்குப் பிறகு தாஜ் ஹோட்டலின் படம் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருந்தது. நான் ஜூலை,2007-ல் சுற்றிப் பார்ப்பதற்காக மும்பை போயிருந்தேன். கேட் வே ஆப் இந்தியாவிற்கு அருகில் இருந்த அந்த கட்டிடம் தாஜ் ஹோட்டல் என்று அப்போது தெரியாது. ஏதோ ஒரு பழமையான கட்டிடம், பார்க்க அழகாக இருக்கிறதே என்று புகைப்படம் எடுத்தேன். அது எப்படி வந்துள்ளது என்றெல்லாம் பின்னர் யோசிக்கவில்லை. இப்பொழுது ஊடகங்களில் தாஜ் ஹோட்டலின் புகைப்படங்களை பார்த்தவுடன், நாம் எவ்வாறு எடுத்துள்ளோம் என்று பார்க்கத் தோன்றியது. தூசி தட்டி எடுத்த அந்த் புகைப்படம்தான் கீழே.


(படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

என் நினைவில் இருப்பது சரியானால் இக்கட்டிடத்தை அதன் வாசலுக்கு நேராக நின்று கட்டிடம் முழுவதும் தெரியுமாறு எடுக்கமுடியாது. அப்படி எடுக்கவேண்டுமானால் கடலில் படகில் சென்றுதான் எடுக்க வேண்டியிருக்கும்!

Wednesday, July 9, 2008

PiT ஜூலை-2008- I

ஏற்கனவே இங்க போட்ட படம்தான். இந்த போட்டிக்காக கொஞ்சம் பின் தயாரிப்பு செஞ்சிருக்க்கேன்.



கொஞ்சம் க்ராப்பிங்,கான்ட்ராஸ்ட் அட்ஜ்ஸ்மென்ட்...அப்புறம் பிரைட்னஸ் அட்ஜ்ஸ்மென்ட். அவ்வளவுதான்! கூடிய விரைவில் இந்த தொழில்நுட்ப ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதங்களோட வருவேன்!

Sunday, July 6, 2008

மேக்ரோ லென்ஸும் ரிவர்ஸ் லென்ஸ் நுட்பமும்

ஃபோட்டோகிராபி-இன்-தமிழ் என்ற இந்த வலைத்தளத்தை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். புகைப்படக் கலையின் நுட்பங்களை எளிய தமிழில் சற்றே(தவிர்க்க முடியாத!) ஆங்கிலத்துடன் விளக்கமாக கற்றுத் தருகிறார்கள். இத்தளம் துவக்கப் பட்டபோது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சுட்டி அனுப்பியதோடு நான் நிறுத்திக் கொண்டேன் :-)கடந்த வாரத்தில் சற்று மேய நேரம் கிடைத்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அதில் வியப்புக்குரியது என்னவென்றால் நான் மூன்றாண்டுகளாக வைத்திருக்கும் டிஜிட்டல் காமிராவில் இருக்கும் பல வசதிகளை இப்பொழுதுதான் கற்றுக் கொண்டேன். (இத்தளத்தில் உள்ள கட்டுரைகள் கொடுத்த உந்துதலால்!)

சரி இந்தப் பதிவிற்கு வருவோம். நம்முடைய சாதாரண காமிராவில் மிக நெருக்கமாக ஒரு பொருளை தெளிவாக எடுக்க முடியாது. காரணம் காமிராவில் உள்ள லென்ஸின் குறைந்த பட்ச குவியத்தூரம் 30 CM என்ற அளவில் இருக்கும். எனவே அதைவிட குறைவான இடைவெளியில் ஒரு பொருளை படம் எடுக்க மேக்ரோ லென்ஸ் என்ற ஒன்றைப் பயன்படுத்தினால்தான் பூக்கள், புழு பூச்சிகள் போன்றவற்றை அருகாமையில் தெளிவாக எடுக்க முடியுமாம். (லென்ஸ்கள் பொருத்தக்கூடிய காமிரக்களில்!).

பொதுவாக விலை ரொம்ப அதிகமாக இருக்கும் மேக்ரோ லென்ஸ்களை வாங்க முடியாத நிலையில் ஏற்கனவே இருக்கும் லென்ஸை முன்பக்கத்தை பின்பக்கமாக மாற்றி அதே போன்ற படங்களை எடுக்கலாம் என்று இங்கே படித்தேன். தொடர்ந்து என்னுடைய க்ளொசஃப் ஷாட்களை எடுத்து அவை எவ்வாறு விழுந்துள்ளன எனப்பார்த்தேன். எதிர்பார்க்காத வகையில் கீழே உள்ள படம் சிறப்பாக வந்திருந்தது.




ரோஜாவின் இதழ்கள் தெளிவாகத் தெரிவதுடன், இதழ்கள் மேல் படிந்துள்ள மழைத்துளிகள் குறைசொல்ல முடியாத அளவுக்கு வந்துள்ளன. இத்தனைக்கும், டிஜிட்டல் காமிராவில் இருக்கும் மேக்ரோ-மோட் (macro-mode)அல்லது ஃப்ளவர் மோடைக்(flower mode) கூட உபயோகிக்கவில்லை. அப்படி இருக்கையில் ரோஜாவிற்கு பின்புறம் இருக்கும் இலைகள் மற்றும் மண்-தரை அவுட்-ஆஃப் ஃபோகஸில் (ஒரு மாதிரி தெளிவில்லாமல் மயமய என்று தெரிவது) வந்திருப்பது ஆச்சரியம்! இந்த மேஜிக்கிற்கு காரணம் ஆட்டொமேடிக் ஃபோகஸ். டிஜிட்டல் காமிராவின் படம் எடுக்கும் பட்டனை (ஷட்டர் ரிலீஸ்) பாதி அளவு அமுத்திவிட்டு பின்னர் முழுமையாக எடுக்கும் நுட்பம். பாதி அமுக்குகையில் காமிரா எடுக்கவேண்டிய பொருளின் தூரம் அதன்மீது படும் ஒளி ஆகியவற்றை உணர்ந்து லென்சின் குவியத்தூரத்தையும் ஃபிளாஸ் போன்ற இதர காரணிகளையும் தேவைக்கேற்றபடி மாற்றி அமைக்கிறது. பின்னர் முழுமையாக அமுக்குகையில் படம் எதிர்பார்த்தபடி தெளிவாக பதிவாகிறது. இதையே மேக்ரோ மோடில் எடுத்திருந்தால் இன்னும் நல்ல படம் கிடைத்திருக்கும்.

படத்தில் எனக்குத் தெரிந்தே குறை ஒன்றும் உள்ளது. சரி,எல்லாத்தையும் நானே சொல்லிட்டா அப்புறம் உங்களுக்கு என்ன வேலை? :-)

Wednesday, July 2, 2008

இரவில் நாயக்கர் மஹால்

மதுரை நாயக்கர் மஹாலில் இரவு நேரம் ஓலி-ஒளி காட்சி நடைபெறுகிறது. அப்பொழுது பல்வேறு வண்ண விளக்குகளின் ஒளியில் சுற்றும் இருள் சூழ்ந்திருக்க எடுத்த படம்.



இதில் நான் எடுத்த விதத்தில் ஒன்றும் சிறப்பு இல்லை. அக்காட்சி இயற்கையாகவே அழகாக அமைந்தது. சொல்லப்போனால் படம் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்து உள்ளது!(அவசரத்தால்)

மீனாட்சி கோயில் கோபுரம்

எந்த ஒரு உயர்ந்த கட்டட அமைப்பைப் பார்த்தாலும், அதை அந்நாந்து பார்க்கும் கோணத்தில் படம் எடுப்பது அனைவருக்கும் வழக்கம்தான். (மேலே இருந்து பார்ப்பதற்கு கழுகுப் பார்வை என்பது போல் இதற்கு என்ன பெயர் வைக்கலாம்? எறும்புப் பார்வை? அல்லது நத்தைப் பார்வை? ஐயோ, வேற ஏதாவது நல்ல பெயரா சொல்லுங்கப்பா!)



இடம் : மதுரை மீனாட்சி கோயில். (எந்த வாசல் என்று நினைவில்லை!)
நாள்: 27-08-2006

நுழைவு வாயிலின் சுவர் அல்லது தூண் பகுதிக்கு மேலே உள்ள பாகத்தை மட்டும் கிட்டத்தட்ட முழுமையாக எடுத்துள்ளேன். நணபனின் முகம் மிகச்சரியாக கோபுரத்தில் உள்ள பெரிய செவ்வக துளை போன்ற பகுதியில் பொருந்துமாறு எடுத்துள்ளேன்.

இனி உங்கள் விமர்சனத்திற்கு!! (ஆம், நண்பனின் முகத்தில் ஒளி விழுமாறு எடுத்திருக்க வேண்டும் :-))